சமயவேல் கவிதைகள்

இப்பொழுதெல்லாம்

அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது
வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில்
விரும்பித் தங்குகிறேன்.
இசை அரங்குகளை விட
சப்தங்கள் உயிர்ப்புடன் எழும்
பேருந்து நிலையங்களில் வெகு நேரம்
பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன்
சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும்
குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன்
கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து
வாசகர் கடிதம் எழுதுகிறேன்
பூங்காக்களை விட
பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள்
அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன்
வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட
மாய விண்வெளியே
நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம்.



விடுமுறை வேண்டும் உடல்

எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு
தன்னைப் பற்றியே
பெரும் கவலை கொள்கிற உடல்
முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு
நச்சரிக்கிறது
பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என
எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது
சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும்
முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது
வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை
என எப்படியும் இருப்பேன் என்கிறது
விடுமுறை விடுமுறை எனும்
யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது
எதுவும் செய்யாமல் அக்கடா என்று
சும்மா கிடக்கும் ஆனந்தம்
பற்றிய அனேக நிறமிகளை
மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது
மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன்
வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது
எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்
கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்.



அழகென்னும் அபாயம்

ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில்
ஊர்தி எந்திரம் நிறுத்தி
சாலையோரம் கொஞ்சம் நடந்து
ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி
சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன்
நுணா மரப் புதரொன்றில்
ஒரு சிறு பறவை
இறகுகள் அடர் சிவப்பு
கழுத்து மயில் நீலம்
உருண்டை வயிறு சாம்பல் நிறம்
கொண்டை மஞ்சள் நிறம்
கண்கள் என்ன நிறம்?
கால்கள் பசுமஞ்சள் நிறம்
விரல்கள் அரக்கு நிறம்
நிற்கிற மரமோ மர நிறம்
அந்த இத்தினியூண்டு பறவை
கொண்டையை ஆட்டி
ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது
என் பெரு நகர ஆத்மாவின் தலை
வெட்டுண்டு உருண்டது
மரணத்தின் விளிம்பை
ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல்

கூவல் முடித்து பறவை
விருட்டென்று பறந்தோடியதும்
உயிர் மீட்டு
ஓர் குழந்தையாக நின்றேன்.

Comments

  1. Uncle
    This is first time I got chance to read your creations. Really superb.


    Regarding Blogspot. Add visitor counter to
    blog. so that we can know how many have visited
    our blog.

    www.littlebharathi.blogspot.com is my blogspot. This was created and maintained by my friend. Since he is in US at present. he couldnot maintain it. So iam creating another blog using my own username and password

    ReplyDelete
  2. விடுமுறை வேண்டும் உடல் மிக ரசிக்க வைத்தது சமயவேல் சார்

    ReplyDelete

Post a Comment

Popular Posts