நூல் மதிப்புரை: இளங்கோ கிருஷ்ணனின் பட்சியின் சரிதம்

நூல்-மதிப்புரை: சமயவேல் 

                           

                                                          ஜடாயுவைப் போன்று கதறும்

                                                                            ஒரு பட்சியின் சரிதம்                      

 

                                    ஒரு கவிதையை  வெறும் உள்ளடக்க ரீதியாக அணுக எத்தனிப்பது அந்தக் கவிதைக்கு ஆபத்தை உண்டாக்குகிற காரியம் என்று எண்ணுகிறேன். வெறும் உள்ளடக்க ரீதியான அணுகல்களை அனுமதிக்கும் ஒரு கவிதையை தோல்வியுற்ற கவிதை என்று கூறினால் இந்த அரங்கில் இருப்பவர்களில் எத்தனை பேர் அதை சம்மதப்பீர்கள் என்று தெரியவில்லை. கவிதையைப் பற்றி பேசுவதே கூட ஒரு பெரிய அபத்தம் என்று ஒருமுறை எண்ணியிருக்கிறேன். எத்தனையோ பேர் எத்தனையோ காலம் பேசினாலும் ஒரு சிறந்த கவிதையில்  இன்னும் கூறப்பட முடியாத, அணுகப்பட முடியாத, புரிந்து கொள்ள முடியாத ஒருபுதிர்த்துகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தக் துகள்தான் அந்தக் கவிதைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாயலைக் கொடுத்து வருகிறது. இப்படியெல்லாம் நான் கூறுவது ஒரு முழு முற்றான முடிவு அல்ல. ஏனெனில் இன்று எதைப்பற்றியும் ஒரு முழுமுற்றான முடிவுக்கு வரமுடியவில்லை. முழுவதுமாக நம்மை ஒப்படைப்பதற்கான வெளியோ, இயக்கமோ, மனிதர்களோகூட நம்மிடம் இல்லை. எனவேதான் 2000க்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்களின் கவிதைகளில் உள்ளடக்கமே இல்லை என்னும் குற்றச்சாட்டுகளையும் மீறி இன்றைய இளம் கவிஞர்களின் கவிதைகளை விரும்பி வாசித்து வருகிறேன். இந்த விஷச் சூழலில் என்ன உள்ளடக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு இளம்கவி எதிர்த்துக் கேட்டால் கூறுவதற்கு என்னிடம் பதிலேதும் இல்லை. எனக்கான கருத்துருவங்களை உருவாக்கி அதைத் தலையில் தூக்கிக்கொண்டு அலையும் திராணியும் எனக்கில்லை.

                                  இளங்கோ கிருஷ்ணனின் பட்சியின் சரிதம் தொகுப்பில் மூன்று வகையான கவிதைகளைப் பார்க்கிறோம்.

                 1) பெருங்கதறல், ஓலம், ரணத்தில் புரளும் வலியின் கூச்சல்,  சகிக்க முடியாத தோல்வி, கோபம், பெருங்கோபம், அவமானம், கேவலம், தனிமை, முழுத்தனிமை, ஏமாற்றம், ஏக்கம், முழுமுற்றான நெருக்கடியில் நசுங்கும் முகம், என்று மனித மொழியிலிருக்கிற அத்தனை எதிர்மறைச் சொற்களையும் ஒன்று திரட்டி நமக்குள் பாய்ச்சி நம்மையும் துடிக்க வைக்கும் 'துயரி' ஒருவரால் எழுதப்பட்ட கவிதைகள்.

 

                 2) மெல்லிய நம்பிக்கைகளுடன் கூடிய யௌவனச் சொற்களால் நிரம்பிய கவிமொழிச்சித்திரங்கள்.

 

                 3) இருப்பின் முழுமுற்றான நெருக்கடிகளின் விளிம்பில், தத்துவக் குளத்தில் விழுந்து விடாமல், வெறும் மனித எத்தனத்தில் எல்லை தாண்டி துள்ளிக் குதிக்கும் தற்பகடிக் கவிதைகள்

 

                 முதல் வகைப்பட்ட, துயரி ஒருவரால் எழுதப்பட்ட கவிதைகளே இந்தத் தொகுப்பு முழுவதும் நிரம்பியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளையும் ஒரு சேரப் படித்துவிட முயன்றால், நீங்கள் ஒரு பெருந்துக்கத்தில் ஆழ்வதைத்தவிர வேறு வழியில்லை


                      கொட்டும் மழையில்/எங்கொதுங்கி தப்பிக்க/எங்கொதுங்கி தப்பிக்க/ஓடும் ஒரு லாரியின்/ சக்கரத்தினடியில்என்று ஒரு சிறிய கவிதை. கொட்டும் மழை ஒரு எதார்த்தம் எனில் கவிஞனுக்குக் கிடைக்கும் மாற்று எதார்த்தம் ஓடும் ஒரு லாரியின் சக்கரத்தினடியில் இருக்கிறது. நித்ய முரண்களின் கருப்பு இடைவெளிகளில் அலையும் சீரிய கவிகளின் வரிசையில் இளங்கோ கிருஷ்ணனும் இடம் பிடித்துவிட்டார்.

           இன்னொரு கவிதையில்இதயம் பிளக்கும் காதலின் துயரத்தைச் சொல்ல உடலெங்கும் குருதி வழிய மலை ஏறிப் போய் ஒரு பாறாங்கல்லின் முன் நிற்கிறார். ‘அதன் காலடியில் சரிந்து குமுறுகிறீர்கள்/ வாஞ்ஞையாய் முதுகு வருடி அணைத்துக் கொள்ளவா போகிறது/ பாறாங்கல் அது வெறும் பாறாங்கல்என்று கவிதை முடிகிறது. மக்கள் மொழியில் துயர்ச்சொல்லாக வழங்கும் பாறாங்கல்லை கவிதைக்குக் கடத்தி அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்.

 

           ஒரு மரத்தை நம் வழிக்குக் கொண்டு வரஎன்னும் கவிதையில் அதிகாரத்தின் கொடூரமான சொற்களால் அந்த மரத்தைக் கொலை செய்கிறார். பிறகுகதவுகள்/ நாற்காலிகள்/ மேசைகள் அல்லது சவப்பெட்டிகள்/ என்ன வேண்டுமானாலும் செய்வோம்அதிகாரம் பற்றிய உலக மொழிகளில் இருக்கிற பல கொடுமையான கவிதைகளோடு இந்தக் கவிதையும் சேர்ந்து கொள்கிறது. இன்னொரு கவிதையில்சுகவீனமாய் இருந்த என் குழந்தை/ மரணித்த செய்தி கிடைத்துப் பல நாட்கள் ஆயிற்று/ நான் போக வேண்டும்/ என்னை விட்டுவிடுங்கள் நண்பர்களேஎன்று கதறிஎனக்கு இப்பொழுது தேவை/ ஒரு நிம்மதியின் சிகரெட்என்கிறார். நிம்மதியின் சிகரெட் எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

           நகரத்தின் அடர்த்தியில் வழி தவறிய இசைத்துணுக்கொன்று…………………… நம்பிக்கைகள் மெல்லச் சரிந்துகொண்டிருக்கும் நாளில் பலத்த குண்டு வெடிப்பின் ஓசையில் உடல் சிதறிப் போகிறது.இந்த நாள் என்னும் கவிதையில்நம்பிக்கை/ ஒரு புளுகனின் சொற்கள்/ ஆசையோ/ கிழட்டுத் தேவடியாளின் சுருக்குப் பை சபித்திலின் சூறை/ நாறிக்கொண்டிருக்கும் சாக்கடையோர/ புதர் மேட்டில் அரும்புகிறது/ என் ஆசுவாசத்தின் புல்/” என்றெல்லாம் எழுதுகிறார்.

            இது போல் பட்சியின் சரிதம் கவிதையும் ஒரு துயரக் கதைதான். பீடிகை-காதைகள்-அந்தம் என்று வரிகளுக்கு நடுவில் துணைத் தலைப்புகளிட்டு வாசிப்பவர்களை கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளச் செய்கிறார். ஆனால் பட்சியின்கரும்பழுப்புச் சிறகுகள்/ நிலமுரசிக் கிழிகின்றன/ ரணம் பொறுக்காமல் மீண்டும் சடசடக்கிறதென் சிறகுகள்இத் தொகுப்பின் மையமாகவும் தலைப்பாகவும் பட்சியின் சரிதம்கவிதை அமைந்துவிடுகிறது. இந்தக் கவிதையை அமைப்பதில் கவிஞன் தனது பாரம்பர்யத்தின் சுதந்திரங்களை பயன்படுத்தியிருப்பது புதிய முயற்சியாக வெற்றியடைந்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

            வாழ்வின்ஓசைகளைச் சகிக்கவியலாமல்/ ஒரு கத்தியை எடுத்து காதின் மேல் வைக்கிறார்.” எனும் வரிகளுடன் கூடிய வான்காவின் காது கவிதையும் நவீன வாழ்வின் பெரும்பரப்பு முற்றிலுமாக சகிக்கமுடியாதபடி இருப்பதை இந்தக் கவிதை அதன் மொத்த வலியுடனும் சொல்லிவிடுகிறது.

 

 

                                   இதே வரிசையில் தீக்குச்சி என்று ஒரு கவிதை இருக்கிறது. இளங்கோ கிருஷ்ணன் கவிதை என்னும் பிரத்யேகமான அடையாளத்துடன் கூடிய கவிதை இது. தீக்குச்சிக் கவிஞர்கள் ஒரு குப்பைத்தொட்டிக்குள் விழுந்து கிடக்கிறார்கள். ஒரு தீக்குச்சிதன்னை ஒருத்தி தொட்டு/ மெழுகுவர்த்தி கொழுத்தினாள் என/ பெருமை பீற்றிக் கொண்டது.” ஒரு மனிதனைக் கொழுத்த வல்ல தீக்குச்சிகள் இவையாம். ஆனால் தானே நகரத் தெரியாமல் இதவிடப் பெரிய நாற்றத்திற்கு இடம் பெயர்கின்றன தீக்குச்சிகள். இந்தக் கவிதையின் தொடர்ச்சியாக இத் தொகுப்பிலுள்ள பகடிக் கவிதைகளைக் குறிப்பிடலாம். ஈழப்பெருங்கொலை நிகழ்வுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஒரு சீரிய கவிஞனின் வெளி இப்படியானதாகத்தான்  இருக்க முடியும் என்றும் கருதுகிறேன். அல்லது இன்றைய இந்திய வாழ்வே இப்படித்தான் இருக்கிறதென்றும் கொள்ளலாம். 

             கவிஞனுக்கு இருக்கும் தார்மீக உரிமையில் அவன் எதையும் குரலுயர்த்திக் கேள்வி கேட்க முடியும். பூட்ஸ் அணிந்த சிறுமி என்னும் கவிதை பெருங்குரலெடுத்து ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறது. “எவ்வளவு போராட்டம்/ எவ்வளவு சிரமம்/ யாராலும் கழட்ட இயலாத/ ஒரு பூட்ஸை யார் அவளுக்கு மாட்டிவிட்டது/ முடிவற்ற இந்தச் சாலையில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது அவள் வீடு.”  யாராலும் கழற்ற முடியாத பல பூட்ஸ்களை தினம் தினம் நம் வீடுகளில் நமது குழந்தைகளுக்கும் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கும் நம்மை சாட்டையால் விளாசுகிறது இந்தக் கேள்வி.  

                            உருளைக்கிழங்கு பொடிமாஸ், அதற்கே, அகவன் குறிப்புகள், கிரகர் சோம்சா எனும் கரப்பான் பூச்சி, காப்பி நதி, ஞாயிறு போற்றுதும், பெப்பரேக்கள் கதை முதலிய கவிதைகளைப் தற்பகடி அல்லது சுயஎள்ளல் கவிதைகள் எனலாம். இந்தத் தொகுப்பிலேயே எனக்குப் பிடித்த கவிதை இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ். புயலில் சிக்கியிருக்கும் கப்பலை மனநோயாளிக்கடவுள் வழங்கிய இரண்டு உருளைக்கிழங்குகள் மூலம் எப்படிக் காப்பாற்றுவீர்கள்? மிகுந்த படைப்பூக்கம் கொண்ட சொற்களுடன் கூடிய இந்தக் கவிதையை முழுவதும் வெற்றியடைந்த கவிதையாகக் கொள்ளலாம். புயலில் சிக்கியிருக்கும் வாழ்வை உருளைக்கிழங்குகளையொத்த எக்ஸ் எக்ஸ் எக்ஸ்களைக் கொண்டு எப்படிக் கரை சேர்க்க முடியும்?

                           மெல்லிய நம்பிக்கைகளுடன் கூடிய யௌவனச் சொற்களால் நிரம்பிய மூன்றாம் வகைக் கவிதைகள் இத் தொகுப்பில் இரண்டோ மூன்றோதான் இருக்கின்றன.

            தாண்டவம் என்று ஒரு எளிய சித்திரம்.

                வெயிலில்

                புரண்டு

                புரண்டு 

                பின்னிக்கிடக்கிறார்கள்

போதும். நடப்பட்ட இரண்டு வேல்கள். ஒன்று சக்தி அடுத்தது சிவம்.  நிழல்கள்

மட்டும்தான் பின்னிப் புரள முடியும் அல்லது இருளில் மறைய முடியும். நிஜமான சக்தியும் சிவனும் அல்ல. இப்படி ஒரு அற்பமான எளிய கவிதையில் இரண்டு மூன்று பரிமாணங்கள் எப்படி வந்தன? கவிதையின் புதிர்ப்பாதையை நாம் விளக்கத் தேவையில்லை.        

               பாதானி என்னும் கவிதை ஒரு அற்புதமான சின்னஞ்சிறு சித்திரம்.              

                அழகான பாதானி மரத்தினடியில்

                நின்று கொண்டிருந்தவளுக்குப்

                பாதானி என்று பெயரிட்டேன்

                பக்கம் சென்ற போது

                அவள் பார்வையிலிருந்த அந்நியம்

                மனதைக் கீறியது

                என்னைத் தெரியவில்லையா பாதானி

                என்று அடிமனம் கத்தியது

                திடீரெனத் திரும்பிப் பார்க்கிறாள்

                கலகலவெனச் சிரித்தன பாதானி இலைகள்

 

பாதானி என்ற ஒரு சொல்லே போதும். ஆனால் அந்தச் சொல்லுடன் இலைகள் என்னும் சொல். பிறகு கலகலவெனச் சிரித்தன. கலகலவெனச் சிரித்தன பாதானி இலைகள். இந்தக் கடைசி வரி முந்தைய எல்லா வரிகளையும் விழுங்கிவிடுகிறது. கவிதை இந்த ஒரு வரியைத் தொட்டுத் தொட்டு எல்லா வரிகளுக்கும் பரவுகிறது. அல்லது எல்லா வரிகளிலும் திரள்கிற கவிதையைக் கடைசிவரி தாங்கி நிற்கிறது. இது ஒரு உளடக்கமற்ற கவிதைதான். ஆனால் இது சிறந்த கவிதை ஆகிவிட்டது. 2005க்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்கள் என்று நிலாரசிகன் குறிப்பிடுகிற இளம் கவிஞர்களில் பலர் இது மாதிரியான உள்ளடக்கமற்ற கவிதைகளைத்தான் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். இது பற்றி இன்னும் விரிவாகப் பேச இடமிருக்கிறது என்று கருதுகிறேன்.

 

             

 

 

      

 

               

Comments

Popular Posts