எனது சமீபத்திய கவிதைகள்

1.நெற்றிக்கண் தொலைத்த கவிதை

சிறு தூறலாகப் பெய்யும் மழையால்

கரும் கழிவுகளில் எழும் குமட்டும் நாற்றம்

அசுர ஆட்டோக்கள் கக்கிய

கேஸோலின் வாசம்

நான் ஒரு காலைப் பொழுதில்

வைகைக் கரையில் நிற்கிறேன்.





கரை இருமருங்கிலும் தொடர்ச்சியாய்

ஒலிக்கும் பட்டறைச் சம்மட்டிகளின்

சப்தத்தில் என் செவிப்பறை அதிர்கிறது

ஆயில் சிந்திய கால் சராய்களுக்குள்

மஹால் தூண்களைவிட உறுதியாய் நிற்கும்

பதின்பருவ பையன்களின் கால்கள்;

உயரும் கைகளில் பிதுங்கும் புஜங்களில்

பாண்டிய நாட்டின் வியர்வை வழிகிறது





பன்றிகள் அலையும் கரும்புனல் மேல்

முச்சக்கர சைக்கிளிலிருந்து மருத்துவமனைக்

கழிவுகளைக் கொட்டுகிறான்

குழந்தைத் தொழிலாளி நெடுஞ்செழியன்





கள்ளத்தனமாய் கேஸ் ஏற்றும் வரிசையில்

ஒரு பள்ளிச் சிறுமியர் வண்டியும் நிற்கிறது

கழுத்தில் டைகள் ஆடும்

கருஞ்சிவப்புச் சீருடை மீனாட்சிகள்

ஸ்கேல் யுத்தம் நடத்துகிறார்கள்





மாநகராட்சியின் ஒற்றை மாட்டு வண்டியில்

மூக்கணாங் கயிற்றை சுழற்றியபடி வருகிறார்

குட்கா மெல்லும் கள்ளழகர்





புட்டு வாங்கக் காசில்லாத கந்தலாடைச் சிவனார்

கோப்பெருந்தேவியின் இட்லிக் கடையில் விழும்

எச்சில் இலைகளைக் கவனித்தபடி

தியானத்தில் இருக்கிறார்





நமக்கென்ன என்னும் பாவனையோடு

காறித் துப்புகிறான்

நெற்றிக்கண் தொலைத்த நவீனக் கவிஞன்.


2.மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்


மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்

ஆயினும் நன்றி நன்றி என்கிறார்

யன்னலோர இருக்கையை விட்டுக் கொடுத்தமைக்காக

மற்றும் மற்றும் என்று இருமினார்

ஒலித்த அலைபேசியைத் திறக்கிறார்

லட்சுமி லட்சுமி

லட்சுமி பஸ் ஏறிட்டேன்டா காலை பத்து பத்தரைக்கு

வந்திருவேன்டா... இருமுகிறார்

அலைபேசியை அணைத்து பைக்குள் போடுகிறார்

முழுப் பேருந்தும் கவனிக்கிற மாதிரி தொடர் இருமல்

ஏதேனும் சிரப், மருந்து எடுத்துக்கக் கூடாதா என்றேன்

மருந்தென்ன, பெரிய மருந்தே சாப்பிட்டுட்டேன்

மூணு நாளா சாப்டுட்டே இருக்கேன்
சரி டிபன் எதுவும் சாப்பிட்டாச்சா

கையிலிருந்த மில்க்பிகீஸ் பாக்கெட்டைக் காண்பித்தார்

இது தான் சோறு இட்லி தோசை பூரி பொங்கல் எல்லாம்

பிஸ்கட் தவிர வேற எதுவும் ஆகாது

எல்லாமே டாக்டர்கள் உலகம்

இவ்வளவு கனிவு காட்டும் நீங்கள் ஒரு பிஸ்கட்

எடுத்துக் கொள்ளுங்களேன் என்று பாக்கெட்டை எறிந்தார்

மீண்டும் அலைபேசி அழைப்பு

ஆமாமா டாக்டர் இனிமே வரவேண்டாம்னுட்டார்

சவத்த விடு

அழைப்பைத் துண்டித்து பேசியை பைக்குள் எறிந்தார்

சார் என்ன பிஸ்கட் பிடிக்காதா என்றவர்
இருமத் தொடங்கினார்

தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறார் மணிவண்ணன்.



3.பொட்டலம் பற்றிய யோசனைகள்

இரவின் அந்திமத்தில்

அதிகக் குளிரெடுத்து

போர்வையை மேலும்

இறுக்கிக் கொள்கிறபோது

உணர்கிறேன்

நான் ஒரு

துணிப்பொட்டலம் என்று.





மருத்துவச்சி ஏந்திக் காட்டிய

நிர்வாணப் பொட்டலம் கண்டு

வலியுடனும் குதூகலித்த

அம்மா

இன்றில்லை.





இது பற்றி மேலும்

யோசிக்க முடியாமல்

உருண்டு புரண்டு

தூங்கிப் போனேன்.




காலையில் எழுந்து குளித்து

ஷேவ் செய்து தலைவாரி

பவ்டர் பூசி

ஒரு சிறந்த உடைப் பொட்டலமாய்

தெருவில் நடந்தேன்.


4. மலையை விழுங்கும் மலைகள்

நண்பன் வீட்டு மாடியிலிருந்தபடி

இரவுப் பயணத்திற்குப் பிறகான அதிகாலையில்

வெண் பனிக்குள் மூழ்கிய மலையைப்

பார்த்துக் கொண்டே இருந்தேன்

நிம்மதியின் நிலம் அது என்று உணர்ந்த என்னை

மலை பருகிக் கொண்டே இருந்தது





ஆனால் இரவில் கனவுக்குள் நுழைந்த

ஒரு பெரும் மலைப் பிரதேசம்

பயங்கரம் பூசிய வெயிலில் தகதகத்தது

செம்பழுப்புப் பாறைகள் செதிள் செதிளாக வெடித்து

உயர உயரப் போய்க்கொண்டே இருந்தது

தலை சுழற்றும் பள்ளத்தாக்குகளில்

வீழ்த்திவிடும் அபாயச் சரிவுகளில்

நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்தேன்





ஒரு மலை முடிந்ததும் பல மலைகள்

அடுக்கடுக்காய் முளைத்துக்கொண்டே வந்தன

எனக்குக் கீழே பாளம் பாளமாய் மின்னிய

ஈட்டிப் பாறைகளைக் கண்டு நடுக்கமுற்றேன்





பெரும் மலைகளுக்கு நடுவில் இருந்த

பள்ளத்தாக்கில் நீரும் இல்லை நிலமும் இல்லை

மேலும் கீழும் ஆகயமொவென அச்சமுற்றேன்

எதன் மேல் எது நிற்கிறது என வியந்தபோது

எல்லா மலைகளும் மறைந்து போயின





இப்பொழுது நான்

அந்த அதிகாலைப் பனிமலையின்

கதகதப்பினுள் நுழைந்து கொண்டிருக்கிறேன்.




5.நீலப் பெருவெள்ளம் 


இன்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நீல நிலத்தில்

சிக்கிக் கொண்டு 

எத்திசையில் செல்வதெனத் தெரியாமல் 

திகைத்துப் போய் நிற்கிறேன் 

வெள்ளம் பெருகிக் கொண்டே இருக்கிறது

இந்தப் பக்கம் ஆழமில்லை என்று சொன்னார்களே

இந்தப் பக்கம் நடந்தால் பாறைகள் வருமென்றும்

மெல்ல நடந்து கரையேறிவிடலாம் என்றார்களே 

எங்கிருக்கிறது கரை

எந்தப் பக்கம் இருக்கிறது பாறைப் பாதை?

அடிவானம் வரை வெள்ளம் தானே தெரிகிறது

நீச்சல் தெரியும் எனக்கு

கிணற்றில்,குளத்தில்,கண்மாயில்

நீந்தியிருக்கிறேன் 

கடல் நீச்சல் கூட கொஞ்சம் தெரியும்

வேம்பார் கடலில் கரையோரம் நின்ற படகு வரை

நீந்தியிருக்கிறேன்.

ஊழிப் பெருவெள்ளத்தில் தினசரி சிக்கிக் கொள்ளும்

முதல் மனிதன் நான் தான்

வெள்ளம் பெருகிக் கொண்டே இருக்கிறது





இந்த நீலப் பெருவெள்ளம் என்னை ஒன்றும் செய்யாது

என்னும் சிறிய எண்ணம்

எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது

காலடியை மட்டும் விட்டுவிடாமல் நிற்கிறேன் 

பெருகிக் கொண்டே இருக்கிறது வெள்ளம்.






6. அச்சு அசல்


மறைந்த அப்பாவின் மறைந்த காதலியின்

பேத்தியும் அவள் காதலனும்

என் எதிரில் உட்கார்ந்து

கோல்டு காப்பி அருந்துகிறார்கள்





ஆண்டாள் என்ற பெயரில்

அப்பாவுக்கு மூன்று காதலிகள்

இவளது பாட்டி மாவில்பட்டி ஆண்டாள்





அப்படியா ஓ அப்படியா நைஸ்

நெடு நாட்களாக எங்கள் வீட்டிலிருந்த

அமேஸான் கிளி போலவே
தலை சாய்த்து அல்ரைட் என்கிறாள்





பை அங்கிள் சொல்லிவிட்டுக்

கிளம்பிய அவள்

இடப்புறம் திரும்பிய போது

அச்சு அசல்

என் அம்மாவைப் போலவே இருந்தாள்.


7. இரவு மழை


இந்த இசை

வானத்திலிருந்து அல்லது சொர்க்கத்திலிருந்து

இந்தத் துளி, சிறுதுளிகள், துளிகள்

கோர்க்கப்பட்ட துளிகள்

மழை

இரவு மழை

முழு இரவும் மழை

முழு இரவும் குளிர்

முழு இரவும் மின்னல்

முழு இரவும் குமுறும் இடிகள்

முழு இரவும் கறுப்பிருட்டு

முழு இரவும் கோர்க்கப்படாத இசை

முழு இரவும் வெதுவெதுப்பு

முழு இரவும் கோதுமை நிறக் காதல்

Comments

  1. ஆஹா! கவிதைகள் அனைத்தும் அருமை சமயவேல் சார்..

    ReplyDelete
  2. கவிதைகள் அனைத்தும் நன்று!

    ReplyDelete

Post a Comment

Popular Posts